வகுப்பு 8 ச அ இந்தியாவில் கல்வி வளர்ச்சி- பாடப்புத்தக வினா-விடைகள்

இந்தியாவில் கல்வி வளர்ச்சி


மதிப்பீடு


I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. வேதம் என்ற சொல் _________​​​​​​  லிருந்து வந்தது.

அ) சமஸ்கிருதம்  ஆ) இலத்தீன் இ) பிராகிருதம் ஈ) பாலி

விடை: அ) சமஸ்கிருதம்

2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

அ) குருகுலம் ஆ) விகாரங்கள் இ) பள்ளிகள் ஈ) இவையனைத்தும்

விடை: அ) குருகுலம்

3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

அ) உத்திரப்பிரதேசம் ஆ) மகாராஷ்டிரம் இ) பீகார் ஈ) பஞ்சாப்

விடை: இ) பீகார்

4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

அ) 1970 ஆ) 1975 இ) 1980 ஈ) 1985

விடை: இ) 1980

5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

அ) இங்கிலாந்து ஆ) டென்மார்க் இ) பிரான்சு ஈ) போர்ச்சுக்கல்

விடை: ஈ) போர்ச்சுக்கல்

6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது?

அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

ஆ) 1833 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

இ) 1853 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

ஈ) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்

விடை:அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

அ) சார்ஜண்ட் அறிக்கை, 1944

ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

இ) கோத்தாரி கல்விக்குழு, 1964

ஈ) தேசியக் கல்விக் கொள்கை, 1968

விடை:ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

8. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) 1992 ஆ) 2009 இ) 1986 ஈ) 1968

விடை:இ) 1986


II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வேதம் என்ற சொல்லின் பொருள் _________.

விடை: அறிவு

2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் _________.

விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர்_________ ஆவார்.

விடை: இல்த்துமிஷ்

4. புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு _________.

விடை:1992

5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு _________ ஆகும்.

விடை: அனைவருக்கும் கல்வி இயக்கம்

6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _________.

விடை:1956


III பொருத்துக


விடை:


இட்சிங்

சீன அறிஞர்

பிரான்சிஸ் சேவியர்

கொச்சி பல்கலைக்கழகம்

உட்ஸ் கல்வி அறிக்கை

இந்திய கல்வியின் மகா சாசனம்

இரண்டாம் சரபோஜி

சரஸ்வதி மகால்

சர் தாமஸ் மன்றோ

மதராஸில் மேற்கத்திய கல்வி



IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

1. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன.

விடை:சரி

2. கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.

விடை:சரி

3. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.

விடை:சரி

4. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை

விடை: தவறு

5. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

விடை:தவறு


V பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு

1. i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ.) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை  தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி

கொண்டிருந்தனர்.

iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.

அ) i மற்றும் ii சரி

ஆ) ii மற்றும் iv சரி

இ) iii மற்றும் iv சரி

ஈ) i, ii மற்றும் iii சரி

விடை: ஈ) i, ii மற்றும் iii சரி

2. சரியான இணையைக் கண்டுபிடி

அ)  மக்தப்கள் - இடைநிலைப் பள்ளி

ஆ)  1835ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு - ஆங்கிலக் கல்வி

இ)  கரும்பலகைத் திட்டம் - இடைநிலைக் கல்வி குழு

ஈ) சாலபோகம் - கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

விடை: ஆ), ஈ)


VI பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

1. குருகுலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

  • பல குருகுலங்கள் முனிவர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன.

  • காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர். 

  • தொடக்க காலத்தில் ஆசிரியரால் (குரு / ஆச்சார்யா) தன்னைச் சுற்றி இருந்த மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டது. 

  • குருவின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக் கல்விமுறை எனப்பட்டது.

2. பண்டைய இந்தியாவில் உருவான மிகவும் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் பெயர்களை எழுதுக.

  • தட்சசீலம், 

  • நாளந்தா, 

  • வல்லபி, 

  • விக்கிரமசீலா, 

  • ஓடண்டாபுரி மற்றும் 

  • ஜகத்தாலா 

ஆகிய பல்கலைக்கழகங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.


3. தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும். இதனை 1980இல் யுனெஸ்கோ, உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது. சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும்.


4. சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக.

இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் (எண்ணாயிரம், முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தது) புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது. திருபுவனையில் (பாண்டிச்சேரியில் உள்ளது). ஒரு வேதக் கல்லூரி செழித்தோங்கியது. திருவிடைக்காளை கல்வெட்டு நூலகத்தைப் பற்றியும், வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறைக் கல்வெட்டு மருத்துவப் பள்ளி பற்றியும் குறிப்பிடுகிறது.


5. SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.

  • அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)

  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA)

6. கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழிசெய்கிறது.



VII விரிவான விடையளி

1. பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?

பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, மற்றும் பதாஞ்சலி ஆகியோர்களின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன. 

வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடைவளர்ப்பு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன. உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் பங்கேற்றனர். 

கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்குக் குருக்களும், அவரது மாணவர்களும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு இணைந்து பணியாற்றினர். மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 

கற்றலில் மேம்பட்ட நிலையிலுள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர். சக மாணவர்களுடனான குழுக் கற்றல் முறை நடைமுறையில் இருந்தது.

2. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி பற்றி ஒரு பத்தி எழுதுக.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இநதிய கல்வியின் வரலாற்றை நாம் நான்கு

கட்டங்களாகப் பிரிக்கலாம்.

 (i) ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம்

 (ii) 1813 முதல் 1853 வரையிலான காலம்

 (iii) 1854 முதல் 1920 வரையிலான காலம்

 (iv) 1921 முதல் 1947 வரையிலான காலம்

(i)  ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம் தொடக்க காலங்களில், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்றகொள்கையைப் பின்பற்றியது. கிழக்கிந்திய கம்பெனியின் 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. சமயப்பரப்புக் குழுவினரைத் தவிர, வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த பிரேசர் போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.

(ii) 1813 முதல் 1853 வரையிலான காலம் 

இரண்டாவது கட்டமானது கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகிய பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் கொண்ட காலமாக கருதப்பட்டது. 

  • முதலாவது பிரிவினரான கீழ்திசைவாதிகள் கீழ்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளைப் பயிற்று மொழியாக்கவும் விரும்பினர். 

  • இரண்டாவது பிரிவினரான ஆங்கிலசார்பு கோட்பாட்டுவாதிகள் ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவைப் பரப்புவதை ஆதரித்தனர். 

  • மூன்றாவது பிரிவினர், பயிற்று மொழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்.

(iii)  1854 முதல் 1920 வரையிலான காலம் 

ஆங்கிலேயரின் செல்வாக்கு மிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என்றும் அழைக்கலாம். இது 1854ஆம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது. 1882ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஹண்டர் கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.

(iv)  1921 முதல் 1947 வரையிலான காலம் 

நான்காவது காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும். 1935ஆம் ஆண்டுச் சட்டம் நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 1929ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார பெருமந்தத்தால் புதிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தி, மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை (1944) தயாரிக்கப்பட்டது.

3. தேசியக் கல்விக் கொள்கை பற்றி விவரி?

சுதந்திரத்திற்கு பிறகு, 1968 ஆம் ஆண்டு முதலாவது தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது தேசத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதோடு, பொதுவான குடியுரிமை, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. 1986ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை, மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும். 

இக்கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சமவாய்ப்புகள், உதவித் தொகைகள், வயது வந்தோர் கல்வி, திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மூலம் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது. 

புதிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்ததுடன், தொடக்கப் பள்ளிகளைத் தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. புதிய கல்விக் கொள்கையானது 1992ஆம் ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. 

இது தேசிய பாடத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைப் பயிற்சி கல்வியை வலியுறுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குப்படுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.

4. சோழர் காலத்தில் கல்வியின் நிலையைப் பற்றி விரிவாக எழுதுக.

சோழர்களின் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் அறிவார்ந்த மற்றும் புதுமைகளைப் புகுத்திய காலம் எனலாம். தமிழ்வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.

கலைத்திட்டமும் பாடத்திட்டமும் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தது. அக்கால கல்வெட்டுகளிலிருந்து ஆசிரியர்களின் தகுதிகள், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பள்ளிகளுக்கு அளித்த நிலங்கள் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளமுடிகிறது. 

இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் (எண்ணாயிரம், முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தது) புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது. திருபுவனையில் (பாண்டிச்சேரியில் உள்ளது) ஒரு வேதக் கல்லூரி செழித்தோங்கியது. திருவிடைக்காளை கல்வெட்டு நூலகத்தைப் பற்றியும், வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறைக் கல்வெட்டு மருத்துவப் பள்ளி பற்றியும் குறிப்பிடுகிறது.

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்